ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: ஒரு விசைப்படகும் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இதனால் வேதனையடைந்த ராமேசுவரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 545 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இதில் இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அப்படகில் இருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜெயமாலை டார்சன்(32), செல்வ ரஸ்கின்(30), டொரின்(40), சீமோன் ராஜ்(36), நம்புராஜன்(33), இனிக்கோ (33) உள்ளிட்ட 12 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்த மீனவர்களை விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வரும் 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 நாள்களில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளையும், 35 ராமேசுவரம் மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்: இந்நிலையில் ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மீனவர்கள் தொடர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், நாளை (இன்று) ஒரு நாள் ராமேசுவரம் மீனவர்கள் அனைவரும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.