தமிழ்நாட்டில் 70ஆயிரம் ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றம்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 70ஆயிரத்து 116 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழகஅரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சீமை கருவேல மரங்கள்,  தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் இந்த மரங்களை கடந்த 1950- 60களில் வெளிநாட்டிலிருந்து,  விதைகளாக கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் தூவப்பட்டது. இந்த விதைகள்தான் தற்போது மரமாக வளர்ந்து, தமிழக விவசாயிகளின் வாழ்தாரத்தை சிதைத்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்து, வளரும் இந்த மரம், சுமார் 25சதவிகித நிலங்களை ஆக்கிரமித்து. இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியதாகும். மழை பெய்யவில்லை என்றாலும், நிலத்தில் நீரே இல்லை என்றாலும் கூட இவை வளரும் தன்மையுடையவை. இந்த மரம் அதிக அளவிலான இடங்களை ஆட்கொண்டு வருவதால், நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. இதுமட்டுமின்றி  காற்றின் ஈரப்பதத்தையும்  உறிஞ்சி விடுகிறது. இந்த மரம் பிராணவாயுவை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

தமிழகத்தின் வறட்சிக்கு காரணமான, இந்த  சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தத் தாவரத்தை ஒழிப்பதற்கான இயக்கம், 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த மரங்களால், ஒருபுறம் விவசாயிகளின் வாழ்வதாரத்தை பாதித்து வந்தாலும், மற்றொரு புறம், பலர் இந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால், இந்த மரங்களை முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது. எந்தத் தாவரமும் முளைக்காத இடத்தில் கூட முளைத்து நிலத்தை நாசம் செய்யும் சீமைக்கருவேல மரங்களை, தமிழ்நாட்டிலிருந்து அடியோடு அகற்ற பத்து ஆண்டுகள் ஆகும் என்று தலைமை வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சீமைக்கருவேல மரங்களை 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுவரை 70ஆயிரத்து 116 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.