நடிகராகவும் முத்திரை பதிப்பாரா செல்வராகவன் ?

தமிழ் சினிமாவை மற்றுமொரு புதிய பாதைக்குள் கொண்டு சென்ற இயக்குனர்களில் செல்வராகவனும் முக்கியமானவர். தன்னுடைய முதல் படமான 'காதல் கொண்டேன்' படத்திலேயே ஒரு வித்தியாசமான காதலைக் காட்டி முத்திரை பதித்தவர். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த '7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்கள் வெற்றி தோல்வி என்பதைக் கடந்து இன்றும் ரசிக்கப்படுபவை. அதில் 'இரண்டாம் உலகம்' மட்டுமே விதி விலக்கு.

தற்போது தனுஷ் நடிக்க 'நானே வருவேன்' படத்தை இயக்கி முடித்துள்ள செல்வராகவன், நாளை மறுதினம் விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'பீஸ்ட்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். செல்வராகவன் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆன முதல் படம் 'சாணி காயிதம்'. அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்குக் கிடைத்த வாய்ப்பு 'பீஸ்ட்'. இப்படத்தில் உளவுத் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் நடிக்கும் படம் என்பதால் நடிகராக செல்வராகவனும் அதிகம் கவனிக்கப்படுவார். படத்தின் டிரைலரில் அவர்தான் முதலில் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனராக தனி முத்திரை பதித்த செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதிப்பாரா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.