அடுத்தடுத்து 5 பேர் பலி- கிராமத்தை பேய்கள் சூழ்ந்ததாக ஊரடங்கு ஏற்படுத்திய மக்கள்

திருப்பதி:

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்த வண்ணம் உள்ளது. உலக அளவில் பேய் சம்பந்தமான சினிமா படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி ஒரு ஊரடங்கை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் இறந்தனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே பேய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

அடுத்தடுத்து 5 பேர் இறந்ததால் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கேட்டனர். அவர் கிராமத்தை சுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளன. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என கூறினார்.

அதன்படி சருபுஜ்ஜிலி கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக நம்பிய மக்கள், அவற்றை விரட்ட பூஜை செய்து வருகின்றனர். 2 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர். நாளை இந்த சிறப்பு பூஜை நடக்கிறது.

இதற்காக கிராமத்தை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இதையறிந்த போலீசார் அந்த கிராமத்திற்கு சென்றனர். பேய்கள் என்பது உலகத்தில் கிடையாது. இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து பூஜையை செய்து வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

கிராமத்தில் பல ஆண்டுகளாக அமாவாசை சிறப்பு பூஜை நடத்தப்பட்டதால், மக்கள் நலமாக இருந்தனர். சில ஆண்டுகளாக பூஜை நடக்கவில்லை. இதனால் கிராமத் தலைவர் உட்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக கூறினார். அவற்றை விரட்ட பூஜை நடத்தப்படுகிறது.

பூஜை நடைபெறும் நாட்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என ஊரடங்கை அமல்படுத்தினோம். கொரோனாவை விரட்ட நாட்டில் ஊரடங்கு அமலானது போல், ஆவிகளை ஒழிக்க ஊரடங்கு பிறப்பித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.