“அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு தற்போதைக்கு இல்லை” என்று பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அவரை கட்சியில் சேருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸில் இணைவார் என பரவலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், காங்கிரஸில் இணையப் போவதில்லை என சில தினங்களுக்கு முன்பு அறிவித்த பிரசாந்த் கிஷோர், மக்களை நேரடியாக சந்திக்கப் போவதாகவும் ட்வீட் செய்தார். இதன் காரணமாக, புதிய கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கப்போவதாக கூறப்பட்டது. தனது சொந்த மாநிலமான பீகாரில் அவர் அரசியல் பயணத்தை வியாழக்கிழமை (இன்று) தொடங்குவார் எனவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை இன்று சந்தித்த பிரசாந்த் கிஷோர், “அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. அப்படியொரு எண்ணம் தோன்றினால், அதுகுறித்து ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். மக்களை நேரடியாக சந்திக்கப் போகிறேன். இதற்காக மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி 3,000 கி.மீ. பாதயாத்திரையை தொடங்கவுள்ளேன். இதில் ஏராளமான மக்களை சந்தித்து ‘மக்கள் நல்லாட்சி’ திட்டம் குறித்து ஆலோசனை நடத்துவேன்” எனக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM