அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம்

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத விநோதம் ஒன்று இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. அது அதிகாலை 3 மணிக்கும், 5 மணிக்கும் சினிமா காட்சிகள் நடத்துவது. குளித்து விட்டு அதிகாலை கோவிலுக்கு சென்ற காலங்கள் மாறி தியேட்டருக்கு செல்லும் காலம் உருவாகி உள்ளது. ஆரம்பத்தில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு மட்டுமே நடந்து வந்த இந்த அதிகாலை காட்சிகள், இப்போது அடுத்தடுத்த நடிகர்களுக்கும் நடக்க தொடங்கி இருக்கிறது. அதிகாலை காட்சியை பிரஸ்டீஜாக கருதும் மனோபாவம் நடிகர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த அதிகாலை காட்சிக்கு ஆப்பு வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. சென்னை, பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகள்படி, அதிகாலை 1 மணி காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக் கூடாது.

ஆனால் இதனை மீறி திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை காலை 9 மணிக்கு முன்பாக திரையிடப்படுகிறது. அந்த காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பதுடன் வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த சட்டவிரோத சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இதுசம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இந்த சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சட்டம், விதி மற்றும் உரிம நிபந்தனைகளை மீறி படங்கள் திரையிடப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது குறித்து தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.