போராட்டத்தில் ஈடுபட்டோரை வெளியேற்றுகிறது குவைத் அரசு| Dinamalar

துபாய் : முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது.

பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குவைத் உட்பட பல முஸ்லிம் நாடுகளும், தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தியத் துாதரை அழைத்து, இந்த நாடுகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசியதை கண்டித்து, மேற்காசிய நாடான குவைத்தில், சமீபத்தில் கண்டன போராட்டம் நடந்தது. இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்து, சொந்த நாட்டுக்கு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ‘அராப் நியூஸ்’ என்ற ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:குவைத் நாட்டு சட்டப்படி, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம், தர்ணா ஆகியவற்றில் பங்கேற்க கூடாது. இந்த சட்டத்தை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டு, சொந்த நாட்டுக்கு வெளியேற்றப்பட உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.