அடுத்த வார பாடசாலை நடவடிக்கை: இறுதித் தீர்மானம் வார இறுதியில்

போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை இந்த வாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த வார இறுதிப் பகுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்து 193 பாடசாலைகளில் 9 ஆயிரத்து 567 பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடங்களில் பாடசாலை நாட்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதாகவும் ஒன்லைன் கல்வி நடவடிக்கை கிராமப்புறங்களில் வெற்றியளிக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை பிற்போட நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூலம் மாணவர்களுக்கான விசேட விரிவுரைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.