நாடாளுமன்றத்தில் இன்று வாக்குப்பதிவு புதிய துணை ஜனாதிபதி யார்?

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் எம்பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 788 எம்பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார். ஜனாதிபதி தேர்தல் போல் இல்லாமல், இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் மட்டுமே நடக்கும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். பின்னர், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய துணை ஜனாதிபதி யார் என்பது அறிவிக்கப்படும். இத்தேர்தலைப் பொறுத்த வரையில், ஆளும் கட்சி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.