துணை வேந்தர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு: தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணை வேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இந்த மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில், துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்றும், துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்வது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநர் துணை வேந்தரை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார். துணை வேந்தரை தேர்ந்தடுப்பதற்கான தேடல் குழுவை மாநில அரசு அமைக்கும். இந்த குழுவிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஆளுநருக்கு மாநில அரசு வழங்கும். அவர் மாநில அரசுடன் கலந்தாலோசித்து துணை வேந்தர்களை நியமனம் செய்வார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.