பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க் : ”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்களுக்கான பேச்சு தொடர்பான நடைமுறைகள் அரசியல் தந்திரங்களால் தடுக்கப்படக் கூடாது,” என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் தெரிவித்தார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படவில்லை.

தற்போதுள்ள இரண்டு ஆண்டு கால தற்காலிக உறுப்பினர் அந்தஸ்து வரும் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நம் நாடு தலைமை ஏற்று நடத்த உள்ளது.இந்நிலையில், ஐ.நா., பொதுச்சபையின் உயர்மட்ட குழு கூட்டத்தில், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:பெரிய பொறுப்பு களை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய அளவில் நாங்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் தீர்க்கமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.நாங்கள் உறுப்பினராக இருந்த காலத்தில், சபை எதிர்கொண்டுள்ள சில தீவிரமான, ஆனால் பிளவுபடுத்தும் பிரச்சினைகளுக்கு பாலமாக செயல்பட்டோம்.

மனிதத் தொடர்புடன் கூடிய தொழில்நுட்பத்தை வழங்கு வதில் இருந்து, ஐ.நா., அமைதிப்படைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது வரை எங்கள் பங்களிப்புகள் உள்ளன. பன்முகத்தன்மை, மறுசீரமைப்பு, நியாயமான உலகமயமாக்கல் மற்றும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை ஆகியவற்றை கைவிட முடியாது என்பதை நாங்கள் நம்புகிறோம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்களுக்கான பேச்சு நேர்மையாக தொடர அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அவை அரசியல் தந்திரங்களால் தடுக்கப்படக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.