கடந்த 2013-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தோனி கடந்த 2014-ம் ஆண்டு சம்பத்குமார் தன் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி ரூ.100 கோடி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த விவாதம் நடத்திய தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது, அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளைக் களங்கப்படுத்தும் விதமாக சம்பத்குமார் கருத்து கூறியுள்ளார். சம்பத்குமார் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரிடம் அனுமதி கேட்கப்பட்டது. தோனி தரப்பு வழக்கு தொடர அரசு வழக்கறிஞர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. விரைவில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காரமன் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது. தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.