ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசன் கடந்த அக்டோபர்ம் 7-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் தமிழக ரசிகர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் முதல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதி 31 – 31 என்ற புள்ளிகளில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் போது தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எதிரணி வீரரை பிடிக்க சென்ற போது, முழுங்காலில் படு மோசமாக காயம் ஏற்பட்டு ஸ்ட்ரக்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
பவன் ஷெராவத் இன்றி விளையாடிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது. கேப்டனும், முன்னாள் வீரருமான ஷெராவத் இன்றி விளையாடுவதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்த நிலையில், ப்ரோ கபடி சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பவன் ஷெராவத் விலகியுள்ளதாக தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. காயத்தால் அவதியடைந்து வந்த பவன் ஷெராவத்திற்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள ப்ரோ கபடி தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.