3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த புளியம்பட்டியில், கடந்த மே 19ம் தேதி, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த நவீன்(எ)நவீன்சக்கரவர்த்தி (25), சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு உதவிபுரிந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர்(எ) கபிலன் என்பவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததால், இவ்வழக்கை சேலம் கியூ பிரிவுக்கு மாற்றினர்.

இந்த வழக்கு கடந்த ஜூலை 27ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்ட 3 பேரின் வீடுகளில், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைதான 3 பேர் மீதும், என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத்  தொடர்ந்து துப்பாக்கி தயாரித்த 3பேர் மீதும், என்ஐஏ அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.