அரசு மருத்துவமனைகளின் தரமின்மையும் அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே பிரியா உயிரிழப்புக்கு காரணம்: சீமான் சாடல் 

சென்னை: “அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா, அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே மகள் பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்.

ஐம்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் லாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்கால சூழலில், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தனியார் பெருமருத்துவமனைகளில் உயர்தரமான மருத்துவம் பெறுகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. இதிலிருந்தே அரசு மருத்துவமனைகளின் தரம் எந்த அளவில் உள்ளது என்பது நன்கு விளங்கும்.

கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.

தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாக செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. மகள் பிரியா தலைநகர் சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை என்பதால் செய்தி ஊடகங்களின் மூலம் அவரது மரணமும், அரசு மருத்துவமனைகளின் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிகழும் குரலற்ற கிராமப்புற ஏழை மக்களின் மரண ஓலங்கள் அரசின் செவிகளை வந்தடையாமலே அடக்கி ஒடுக்கப்படுகின்றன என்பதே எதார்த்த உண்மையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இனியும் மகள் பிரியாவிற்கு நேர்ந்தது போன்று, அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான அறுவை சிகிச்சையால் மகள் பிரியா உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த மகள் பிரியாவின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.