கல்குவாரியில் விபத்து: மிசோரமில் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழப்பு?

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மிசோரம் மாநிலம் ஹனத்தியால் மாவட்டம் மவுடார் பகுதியில் ஏபிசிஐ இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம், கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது.

இந்தக் கல்குவாரியில் நேற்று பிற்பகல் 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் பெரிய பாறை உருண்டு விழுந்ததில் சுமார் 15 தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். அந்த பள்ளத்தின் மீது மேலும் மண் விழுந்து மூடியது.

இதையடுத்து அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாறை உருண்டு விழுந்ததில் 15 தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், மேலும் 5 மண்வாரி இயந்திரங்களும், துளை போடும் கருவிகளும் அந்த பெரிய பள்ளத்தின் உள்ளே சிக்கிக் கொண்டன.

போலீஸார், தீயணைப்புப் படையினருடன் அருகில் இருந்த லேயிட்டே கிராமத்தைச் சேர்ந்த மக்களும், தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாறையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

இதையடுத்து மேலும் சில மீட்புப் படையினர் அங்கு அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மீட்புப் பணிகளை பார்வையிட்ட ஹனத்தியால் ஆட்சியர் ஆர். லால்ரெம் சங்கா,“உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்), அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையினரும் விரைவில் இங்கு வரவுள்ளனர். சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.