ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு சேவை; வங்கி மேலாளர் அதிரடி பணி நீக்கம்| Dinamalar

டெஹ்ரான் : ஈரானில் ‘ஹிஜாப்’ அணியாமல் வந்த பெண்ணுக்கு வங்கிச்சேவை வழங்கிய மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலைமுடியையும் மறைக்கும் துணி மற்றும் உடலை மறைக்கும் கறுப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு தண்டனை வழங்க அரசு சார்பில் ஒழுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதித்து வருகின்றனர்.

கடந்த செப்., 16ல் மாசா அமினி, 22, என்ற ஹிஜாப் முழுமையாக அணியாத இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார்

இதையடுத்து நாடு முழுதும் ஹிஜாப்புக்கு எதிராக பெரும் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்தது. இதில் ஏராள மானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், டெஹ்ரானுக்கு அருகில் உள்ள கோம் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கிக்கு ஹிஜாப் அணியாத ஒரு பெண் சமீபத்தில் வந்துள்ளார். ஹிஜாப் அணியாத அந்தப் பெண் குறித்து, போலீசுக்கு தகவல் கொடுக்காத வங்கி மேலாளர், அவருக்கு வங்கிச் சேவையும் வழங்கியுள்ளார்.

ஹிஜாப் அணியாமல் அந்தப் பெண் வங்கிக்கு வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து, கோம் மாகாண கவர்னர் உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.