லக்னோ: மத மாற்றம் தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உ.பியின் முன்னாள் முதல்வருமான மாயாவதி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரையும் போல் கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மத மாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் சலசலப்பு உருவாக்கப்படுகிறது. இது நியாயமற்றது; கவலை அளிக்கக்கூடியது. வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவது, தவறான எண்ணத்தில் மதம் மாறுவது இரண்டுமே தவறு. இப்பிரச்சினையை சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து செய்யப்படும் அடிப்படைவாத அரசியலால் நாட்டுக்குக் கிடைக்கும் பலனைவிட, இழப்புதான் அதிகம்.” இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.