நெய்வேலியில் கேள்விக்குறியானது சுகாதாரம்..!! கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களும், மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அனல்மின் நிலையம்-I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என 5 அனல்மின் நிலையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 7 யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் காலை ஷிஃப்டில் பணிபுரிந்து வந்தனர்.

அவர்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அங்கிருக்கும் கேன்டீனில் காலை உணவு வழங்கப்பட்டுவிடும். அதன்படி இன்று காலை எஸ்எம்இ, ஜிடபிள்யூசி பிரிவுகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும், இட்லியும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒரு சிலருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதற்கடுத்து ஒன்றன்பின் ஒருவராக உணவு சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட, தயிர் சாதம் வைத்திருந்த பாத்திரத்தை சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அதில் எலி ஒன்று இறந்துகிடந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த உணவை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம், என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.