
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தார். உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் 750 கோடிக்கு வசூல் சாதனை படைத்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஆலியா பட் மற்றும் ஒலிவியா மோரீஸ் என இருகதாநாயகிகள் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வெளியானது.

இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.