திருப்பதி கோயில் மூடப்படுமா? மார்ச்சில் தொடங்கும் தடபுடல் ஏற்பாடுகள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் ஆனந்த நிலைய கோபுரங்கள் தங்கத்தால் மின்னும். ஏனெனில் இவற்றின் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கடைசியாக 1958ஆம் ஆண்டு தங்க முலாம் பூசும் பணிகள் நடந்தன. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் பணிகள் வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும்.

பாலாலயம் ஏற்பாடு

முன்னதாக பிப்ரவரி கடைசி வாரத்தில் திருமலை கோயிலில் பாரம்பரிய குருக்கள் மற்றும் ஜீயர்கள் முன்னிலையில் பாலாலயம் செய்யப்படும். அதாவது, புனரமைப்பு பணிகள் செய்யும் போது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களை, அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப் பலகைக்கு மாற்றி விடுவர். அந்த அத்தி பலகை ஆலய வளாகத்திற்குள் குடில் போன்று அமைத்து பூஜை செய்து வருவர்.

தங்க முலாம் பூசும் பணிகள்

இவ்வாறு தெய்வங்களை அத்திப் பலகையின் மீது மாற்றும் நிகழ்வை பாலாலயம் என்று அழைப்பர். திருப்பதி கோயிலில் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை தங்க முலாம் பூசும் பணிகள் நடக்கும். இதற்காக 150 கிலோ தங்கம் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் 8 மாதங்களுக்கு கோயில் வளாகம் மூடப்படுமா? பக்தர்களுக்கு அனுமதி கிடையாதா? என்ற கேள்வி எழுகிறது.

கோயில் நடை மூடப்படுமா?

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகள் நடைபெறும். தவறான செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி எல்லாம் கோயில் நடை மூடப்படாது என்று கூறப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் உள்ள ஆனந்த நிலைய கோபுரத்தில் முதல்முறை தங்க முலாம் பூசப்பட்டது 1267ஆம் ஆண்டு என சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று பின்னணி

அப்போது பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இதற்கான வேலைகளில் ஈடுபட்டார். இதையடுத்து 1359ஆம் ஆண்டு சாளுவ வம்சத்தை சேர்ந்த மன்னர் முங்கிதேவுடு ஆட்சியில் தங்க முலாம் பூசப்பட்டது. பின்னர் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் 1,000 கிலோ தங்கத்தை கொண்டு முலாம் பூசும் பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன் வீடியோ சர்ச்சை

சமீபத்தில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் கோபுரத்தை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின. உயர்மட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் திருமலை கோயிலில் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அந்த வீடியோ பொய்யாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அதன் உறுதித்தன்மை குறித்து ஆராய தடயவியல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலை போலீசிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.