காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியால் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரை கிட்டத்தட்ட அதன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், “என்னுடைய இமேஜை உடைப்பதற்காகப் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க-வும், அதன் தலைவர்களும்தான் இதனைத் திட்டமிட்டுச் செய்திருக்கின்றனர்.
ஆனால், பல ஆயிரக்கணக்கான கோடிகளால் ஒருபோதும் உண்மையை மறைக்க முடியாது. இதை நீங்களும் கண்டீர்கள். உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும்.
பணத்தால் நீங்கள் யாரையும் இழிவுபடுத்தலாம், யாருடைய இமேஜையும் உடைக்கலாம், எந்த அரசாங்கத்தையும் விலைக்கு வாங்கலாம். ஆனால், அது உண்மையாக இருக்காது.
பணத்தையும், அதிகாரத்தையும் உண்மை எப்போதும் ஒதுக்கிவிடும். இந்த எதார்த்தம் தற்போது பா.ஜ.க தலைவர்களுக்கு மெல்ல மெல்லப் புலப்படுகிறது” என்றார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை அண்மையில் சில பா.ஜ.க தலைவர்கள், `பப்பு’ என விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.