ஷாருக்கானை பற்றி அதிகம் தெரியாது: அசாம் முதல்வர் விளக்கம்

கவுகாத்தி: நேற்று முன்தினம் `ஷாருக்கான் யார்?’ என கேட்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, `நேற்று அதிகாலை 2 மணிக்கு எஸ்ஆர்கே. போனில் தொடர்பு கொண்டு பேசினார்,’ என்று கூறியிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய போது, “அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிஜேந்திரா படங்களை பார்த்துள்ளேன். இப்போது வரை ஷாருக்கானை பற்றி அதிகம் தெரியாது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை அதிகபட்சமாக 7 படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன்,’’ என்று கூறினார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான், நாளை திரையிடப்பட்ட உள்ளது. இதனையொட்டி, கடந்த டிசம்பரில் வெளியான அப்படத்தின் `பேஷாராம் ரங்’ பாடலில், தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில் படுகவர்ச்சியுடன் காணப்படுவது இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதாக சர்ச்சை வெடித்தது. அசாம், குஜராத் மாநிலங்களில் இப்படம் வெளியிடப்பட உள்ள தியேட்டர்களை இந்து அமைப்பினர் சூறையாடி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.