சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 1¼ லட்சம் வழக்குகள் பதிவு

பெங்களூரு:-

1¼ லட்சம் வழக்குகள்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் சாலை விதிகளை மீறிவருவதால் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வாகனங்கள் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 1¼ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பெங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 1¼ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 60 சதவீதத்திற்கும் மேல் குறைவு தான்.

2020-ம் ஆண்டு குறைவு

அப்போது 3 லட்சம் வழக்குகள் பதிவாகி இருந்தன. 2022-ம் ஆண்டில் வழக்குகள் குறைந்ததற்கு, போக்குவரத்து போலீசாரின் தீவிர சோதனைகள், அபராதம் விதிப்பு போன்றவையே காரணமாகும். மேலும், தற்போது புதிதாக வரும் கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. இதனால் பலரும் சீல் பெல்ட் அணியும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் நகரப்பகுதியில் சீல் பெல்ட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பெங்களூருவின் வெளிவட்ட பகுதிகளான கனகபுரா சாலை, துமகூரு சாலை, மைசூரு சாலை, மாகடி சாலை ஆகிய இடங்களில் சோதனையின்போது அதிகளவில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.