சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மெதுவாக மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பிப். 2-ம் தேதி (இன்று) தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிப். 3-ம் தேதி (நாளை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வரும் 4-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 5-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பிப். 2-ம் தேதி (இன்று) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
பிப். 3-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கரையை நெருங்குவதையொட்டி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், குளச்சல் ஆகிய தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பருவமழைக்குப் பிந்தைய மாதங்களான ஜனவரி, பிப்ரவரியில், ஜன.1 முதல் பிப். 1-ம் தேதி வரை தமிழகத்தில் வழக்கமாக 12.5 மி.மீ. மழை கிடைக்கும். இந்த ஆண்டு மேற்கூறிய காலகட்டத்தில் 5.3 மி.மீ. மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 57 சதவீதம் குறைவாகும்.