மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான்
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனரான தங்கர் பச்சான் தான் இயக்கிய சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு பள்ளிக்கூடம், அம்மாவின் கைபேசி படங்களில் நடித்தார். மெர்லின் என்ற வெளிப்படத்திலும் நடித்தார். கடைசியாக அவர் இயக்கிய களவாடிய பொழுதுகள், டக்கு முக்கு திக்கு தாளம் படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தில் ஏற்கெனவே பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் இணைந்துள்ளார்.
இவர்கள் தவிர அதிதி பாலன், யோகி பாபு, மஹானா சஞ்சீவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். யுஏவி மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.வீரசக்தி தயாரிக்கிறார்.