சிக்கபல்லாபூர் : ”மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய தேவகவுடாவும், குமாரசாமியும், பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர்,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சிக்கபல்லாபூர் நகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த வாக்குறுதித் திட்ட பயனாளிகள் மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
கர்நாடகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள பிரதிநிதிகள், அரசியல் ரீதியாக வளரக்கூடியவர். அமைச்சர் எம்.சி.சுதாகருக்கு அந்த குணங்கள் அனைத்தும் கிடைத்து உள்ளன.
தேர்தலுக்கு முன்பு நாங்கள் பல வாக்குறுதிகளை அளித்தோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், ஐந்து வாக்குறுதிகள் தருவோம் என்று கூறினோம். சொன்னபடி செய்துள்ளோம்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் நானும், சிவகுமாரும் வாக்குறுதித் திட்டங்களை பற்றி சொல்லி, வாக்குறுதி அட்டைகளில் கையெழுத்திட்டோம். பின் மக்களின் ஆசியுடன் 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தோம்.
சமீப காலமாக தேவகவுடா, மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். பா.ஜ., கூட்டணியில் சேரமாட்டேன் என்றும், மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் கூறினார்.
ஆனால் தற்போது மோடிக்கும் எனக்கும் பிரிக்க முடியாத உறவு இருப்பதாக கூறி வருகிறார். பொய் சொல்லி மோடியை புகழ்வது நியாயமா? தற்போது குமாரசாமியும், தேவகவுடாவும் பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர்களாக மாறி உள்ளனர்.
கர்நாடக வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளனர். அரசியல் சட்டத்தை மாற்றுவேன் என்று பா.ஜ., – எம்.பி., ஒருவர் கூறுகிறார். ஏழைகள், சிறுபான்மையினர், தொழிலாளர்கள் வாழ வேண்டுமானால், அரசியல் சாசனம் வாழ வேண்டும்.
எனவே அரசியல் சாசனத்தை எதிர்க்கும் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும். என்னால் பா.ஜ.,வுக்கு துக்கமே வருவதில்லை. இன்னமும் அரசை கவிழ்க்க முயற்சித்து வருகின்றனர். இப்பகுதி பா.ஜ., – எம்.பி., முனிசாமி, ஒருமுறையாவது மத்திய அரசிடம் வாய்விட்டு கேட்டதுண்டா? எக்காரணம் கொண்டும் அவர் வெற்றி பெறக்கூடாது.
துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால், லோக்சபா தேர்தலில் அவர்களை தோற்டிக்க காங்கிரசுக்கு சக்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்