எஸ்பி முத்துராமனுக்காகக் காத்திருந்த எம்ஜிஆர்

தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் எஸ்பி முத்துராமன். நேற்று அவருடைய 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் செல்லப்பிள்ளை அவர். நேற்றைய அவரது பிறந்தநாளை முன்னிட்டு அந்நிறுவனம் அவரைப் பற்றிய அரிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில், பாக்யராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பாக்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடித்த 'முந்தானை முடிச்சு' படம் மிகப் பெரும் வெற்றி பெற்று 200 நாட்களைக் கடந்து ஓடிய ஒரு படம். அந்தப் படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென தயாரிப்பாளர் எம் சரவணன் முடிவு செய்திருந்தார்.

அப்போதைய முதல்வர் எம்ஜிஆரை அழைத்து படக்குழுவினரை கவுரவிக்க வேண்டுமென விரும்பினார். அதற்கு சம்மதித்து அதற்கான தேதியையும் எம்ஜிஆர் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஆனால், எம்ஜிஆரிடம் வேறு ஒரு தேதியைத் தர முடியுமா என சரவணன் கேட்டிருக்கிறார். எஸ்பி முத்துராமன் அந்தத் தேதியில்லை, அவர் கண் அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார் எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே எம்ஜிஆர், “எனது கால்ஷீட்டுக்காகக் பலரும் காத்திருப்பதுதான் வழக்கம். ஆனால், நான் முத்துராமனுக்காகக் காத்திருக்க வேண்டும் இல்லையா,” எனக் கேட்டிருக்கிறார்.

எஸ்பிஎம் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஏவிஎம் நிறுவனம் நடத்தாது. அவர்தான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நன்றியுரை வழங்குவார். அது இன்று வரை தொடர்கிறது. அந்த பாரம்பரியத்தை உடைக்க வேண்டாம் என சரவணன் நினைத்தார். இது போன்ற பல நிகழ்வுகள் இருந்தாலும் எஸ்பிஎம்முக்கும் எங்களுக்குமான உறவு இது,” என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரஜினிகாந்த்தை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் எஸ்பி முத்துராமன். 1973ல் வெளிவந்த 'கனிமுத்து பாப்பா' படம் அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். 1995ல் வெளிவந்த 'தொட்டில் குழந்தை' படத்துடன் இயக்குவதை விட்டுவிட்டார். இப்போதும் ஏவிஎம் நிறுவனத்தின் அரவணைப்பில்தான் உள்ளார் எஸ்பிஎம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.