ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

ரீ-ரிலீஸ் என்பது எப்போதோ ஒரு முறை நடந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை' எம்ஜிஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுத்தன. அதன்பின் ரஜினி நடித்த 'பாட்ஷா, பாபா' ஆகிய படங்களும், கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான்' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின.

அது அப்படியே தொடர்ந்து கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து சில பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுக்க ஆரம்பித்தன. கடந்த சில மாதங்களில் மட்டும், “விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், 3, விஐபி, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி, பையா, கில்லி” உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின. அடுத்து அஜித் நடித்துள்ள 'பில்லா' படமும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படி ரீ-ரிலீஸ் ஆகும் படங்களால் அப்படங்களைத் தயாரித்தவர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் அதிக லாபம் இல்லையாம். படத்தைத் திரையிடும் தியேட்டர்காரர்களுக்கே அதிக லாபம் வருகிறது என்கிறார்கள். முதல்வாரத்திற்கு தியேட்டர்காரர்களுக்கு 70 சதவீதம், வினியோகஸ்தர்களுக்கு 30 சதவீதம், இரண்டாவது வாரத்திற்கு தியேட்டர்காரர்களுக்கு 80 சதவீதம், வினியோகஸ்தர்களுக்கு 20 சதவீதம் என்ற முறையில்தான் திரையிடப்படுகிறதாம்.

தியேட்டர்காரர்களோடு சேர்த்து யு டியூப் சேனல் வைத்துள்ளவர்களும் நல்ல வருவாயைப் பார்க்கிறார்கள். 'கில்லி' படத்திற்காக இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், ஒளிப்பதிவாளர் கோபிநாத் என பலரது பேட்டிகள் யு-டியுப் சானல்களால் எடுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வருவாய் கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.