
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் விரும்புபவர்கள் மட்டும் இந்த 12 மணி நேர வேலை முறையை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு வாரம் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in