கர்நாடகாவில் கல்லூரி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை: வேலையை ராஜினாமா செய்த பெண் விரிவுரையாளர்

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்தக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதால் கர்நாடகாவில் விரிவுரையாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். துமகூரு நகரில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் சாந்தினி. கடந்த 3 வருடங்களாக இவர் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விரிவுரையாளர் சாந்தினி, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 வருடங்களாக ஜெயின் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. மிகவும் அமைதியாக பணிபுரிந்து வந்தேன். தற்போது கல்லூரி முதல்வர் என்னை அழைத்து ஹிஜாப் உள்ளிட்ட எந்தவித மத அடையாளம் கொண்ட எந்த உடையையும் அணிந்து பாடம் நடத்த வேண்டாம் என கூறினார். 3 வருடமாக நான் ஹிஜாப் அணிந்தே பாடம் நடத்தி வந்தேன். இது சுயமரியாதைக்கு எதிராக உள்ளதால் ராஜினாமா செய்துள்ளேன் என தெரிவித்தார். பொது இடங்களில் ஹிஜாப் அணிந்து வருவது தன்னுடைய தனி உரிமை என்று சாந்தினி கூறியுள்ளார். கல்வி மையங்களில் மாணவிகள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.             

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.