மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம்

அநேகமான வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவற்றை  தேசிய  மின்கட்டமைப்பிற்குள் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
 
சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன்  சேர்க்காமை மற்றும் தாமதப்படுத்துவது தொடர்பில் துரிதமாக  அறிக்கை  சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை உபகுழு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
 
முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டிலும் சூரிய களங்கள்  பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதனூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இது வரை இணைக்கப்படவில்லை என்பது  இது  குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்புக்கான இணைப்பை வழங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் சென்றுள்ளதாக அமைச்சரவை உபகுழுவினால்  அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சரவை உப குழு  கவனம் செலுத்தியதையடுத்து, அதனை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
ஊடக பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.