விமான அவசரகால கதவை திறந்து வெளியே குதித்த பயணி கைது| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில், ஓடுபாதையில் தரையிறங்கிய, ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியேறி, இறக்கை மீது சறுக்கிச் சென்று குதித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில், சான்டியாகோ நகரில் இருந்து, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு, சிகாகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.அந்த விமானம், நிறுத்தும் இடத்தை நோக்கி மெதுவாக சென்றபோது, ராண்டி பிரான்க் டேவிலா, 57, என்ற அமெரிக்கர், அவசரகால கதவை திறந்து அதன் வழியாக வெளியேறி, விமானத்தின் இறக்கையில் சறுக்கிச் சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதனால், அங்கே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து, போலீசார் டேவிலாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். தவறான நடத்தையால் கைது செய்யப்பட்டுள்ள அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.