புதுடெல்லி: சமூக வலைதளத்தில் சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி பேராசிரியர் ரத்தன் லாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இந்துக் கல்லூரியின் வரலாற்று பேராசிரியரான ரத்தன் லால், கியான்வாபி மசூதி வழக்கை முன்வைத்து சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். அதுதொடர்பாக லால் மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிந்தால், போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், லால் மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி வடக்கு சைபர் க்ரைம் போலீசார், பேராசிரியரைக் கைது செய்தனர். அவரை இன்று மதியம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, “ஒரு தனிநபரின் புண்பட்ட உணர்வு ஒட்டுமொத்த சமூகத்தையும், குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற புண்படுத்தப்பட்ட உணர்வுகள் பற்றிய புகார்களை அதன் முழு உண்மைகள் மற்றும் சூழல்களின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர், அவரின் சுற்றத்தார் மற்றும் பொதுமக்களை கருத்தில் கொண்டு தவிர்க்க கூடிய கருத்தினை பதிவு செய்துள்ளார் என்பது உண்மைதான். அது கண்டிக்கத்தக்கது. இருந்தாலும் இது இரண்டு சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டுவதாக இல்லை” என்று தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதேபோல, இந்த முதல் தகவல் அறிக்கை சர்ச்சை தொடர்பாக வேறு எந்த சமூக வலைதளப்பதிவு இடுவதையும், நேர்காணல் தருவதையும் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் ரத்தன் லாலுக்கு உத்தரவிட்டது.
டெல்லி போலீஸ் தரப்பில், “படித்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற பதிவை எதிர்பார்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் மீது இது தொடர்பாக இதுவரை 6 புகார்கள் வந்துள்ளன. எனவே, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
முன்னதாக, கியான்வாபி மசூதி வழக்கை முன்வைத்து சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறி டெல்லி இந்து கல்லூரியின் பேராரிசிரியர் ரத்தன் லால் கைது செய்யப்பட்டார். இந்து கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராக உள்ள இவர் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அண்மையில் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153A, 295A ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவர் மீது எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் பதிவு வைரலான நிலையில், எனக்கு நிறைய ஆன்லைன் மிரட்டல்கள் வருகின்றன என்று டாக்டர். ரத்தன் லால் பதிவிட்டிருந்தார். இது குறித்து ஊடகங்களில் அவர் கூறும்போது, “நான் எனது பதிவுக்காக இத்தகைய மிரட்டல்களும், வசவுகளும் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பூலே, ரவிதாஸ், அம்பேத்கர் எனப் பலரும் இந்து மதத்தின் மீது விமர்சனங்களை வைத்துள்ளனர். நான், எனது பதிவில் விமர்சனம் கூட செய்யவில்லை. ஒரு பார்வையைத் தான் பதிவிட்டிருந்தேன்.
நம் நாட்டில் மட்டும்தான் எதெற்கெடுத்தாலும் மக்களின் மத உணர்வு புண்பட்டுவிடுகிறது. அப்படியென்றால் என்ன செய்வது? வாயில் பேண்டேஜ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் போல?” என்று பேசியிருந்தார்.
கியான்வாபி மசூதி ஆய்வறிக்கையில், மசூதியின் அடித்தள சுவர்களில் இந்து கோயில்களின் பல சின்னங்கள் கிடைத்துள்ளன. இதில், தாமரை, ஸ்வஸ்திக், மேளம், திரிசூலம், பிளிரும் துதிக்கையுடன் யானை முகங்கள் மற்றும் மணிகள் என பல இடங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, மசூதியின் 3 கோபுரங்களின் தூண்களிலும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சமஸ்கிருதம் கலந்த பழங்கால இந்தி வாசகங்களும் 7 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.