கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த கோவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன.
இரண்டாம் தவணை தடுப்பூசி போடத் தொடங்கி ஒரு வருட காலம் ஆனதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து வருகிறது.

ஒமிக்ரான் போன்று புதிய புதிய உருமாறிய வைரஸின் பரவலும் அதிகரித்துள்ளதால் அரசின் சுகாதாரத்துறை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி வந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி ஆலோசனைக் குழு, நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (NTAGI), இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்குமான கால இடைவெளியை குறைக்கப் பரிந்துரைத்துள்ளன.
இதனையடுத்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால அளவை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக, அதாவது 26 வாரங்களாக மத்திய அரசு குறைத்துள்ளது.

இதற்கு முன் இந்தக் கால இடைவெளி 9 மாதங்களாக இருந்தது. தற்போது அது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இரண்டாம் தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாம் தவணை செலுத்திய 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸை அரசின் கோவிட் தடுப்பூசி மையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். இதே கால இடைவெளியில் 18-59 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.