கோத்தகிரி: கோத்தகிரியில் 45 நாட்களுக்கு முன்பு மாயமான கள்ளக்காதல் ஜோடி, வனப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வெள்ளெரிக்கொம்பை சேர்ந்தவர் சரவணன் (25). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், குன்னூர் சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த திருமணமான சுமதி (23) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கடந்த 45 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதன்பின், எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று வெள்ளெரிக்கொம்பை வனப்பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்தபோது மரத்தில் தூக்குப்போட்டு அழுகிய நிலையில் இரு சடலம் தொங்கி கொண்டிருந்தது. தகவலறிந்து குன்னூர் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்கள் மாயமான கள்ளக்காதல் ஜோடி சரவணன், சுமதி என தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.