Tirupati: திருப்பதி பிரம்மோற்சவம்: ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்!

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருமலைக்கு செல்ல 12 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் மின்னொளியில் ஜொலிக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் போது லட்சக் கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் கூடும்.

திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இட வசதி உள்ளது. எனவே பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்தி விட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் கருட சேவைக்கு முந்தைய நாளான 30 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 2 ஆம் தேதி இரவு வரை திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இருசக்கர வாகனத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனத்தை திருப்பதியில் நிறுத்தி விட்டு அரசு பேருந்தில் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.