டெல்லி மதுபான கொள்கை வழக்கு: நாளை ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், கட்சியிலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் இருப்பவர், மணீஷ் சிசோடியா.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து விளக்கம் அளித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக எந்த நேரத்திலும் மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், எதையும் சிபிஐ கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

சிபிஐ சம்மன் தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “மணீஷ் சிசோடியா நாளை கைது செய்யப்படுவார்” என குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.