தீபாவளிக்கு விற்பனை களைக்கட்டியது பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1 கோடிக்கு வர்த்தகம்-விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

வேலூர் : வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் ₹1கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டல்லடித்த பொய்கை மாட்டுச்சந்தையின் நிலவரம் கடந்த வாரம் சுமாரான நிலையை எட்டியது. நேற்றும் கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1500க்கும் மேற்பட்ட மாடுகளும், 500க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

மேலும், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது. இதன் காரணமாக நேற்று ஒட்டுமொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை ₹1 கோடியை கடந்ததாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று(நேற்று) 1500க்கும் மேற்பட்ட மாடுகள், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் சந்தையில் குவிந்தன. அதற்கேற்ப விற்பனையும் ₹1 கோடியை தாண்டியிருக்கிறது.

இதற்கு தொடர்ந்து பெய்து வரும் மழையால் கால்நடைகளுக்கான தீவனம் தாராளமாக கிடைக்கும். அதோடு தீபாவளி நெருங்குவதால் ஆடு, கோழி
களின் விற்பனையும் அதிகரித்ததே காரணமாகும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.