பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்துள்ளனர்.
பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உறுதியாகியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு
தலைவர்
எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு. அவற்றைக் களைய வேண்டுமானால் சமூக நிலையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நிலைக்கு பதிலாக பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது.” என பதிவிட்டுள்ளார்.
“மனிதர்களின் பொருளாதார நிலை என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது ஆகும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகத் தான் இருக்குமே, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சமூகநீதியாக இருக்காது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பட்டியலின, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில், அதை போக்குவதற்காக நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றை பாமக ஆதரிக்கும்.” எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “எந்த அடக்குமுறைகளையும் அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என கூறி 10%இடஒதுக்கீடு வழங்குவதும், அதை உச்ச நீதிமன்றம் ஏற்பதும் சமூகநீதி மீதான தாக்குதல்.” என கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என விசிக அறிவித்துள்ளது.