இமாச்சலப் பிரதேச தேர்தல் 2022: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இமாச்சலப் பிரதேச தேர்தலுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 28.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்கு 50,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்கு 25,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். கடும் குளிரையும், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 37.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் ஒரு மணி நேரத்தில் வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 19.98 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது 1 மணி நிலவரப்படி, 37.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக சிர்மனோர் மாவட்டத்தில் 41.89 சதவீத வாக்குகளும், முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டமான மண்டி மாவட்டத்தில் 41.17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இமாச்சலப் பிரதேச தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 67 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆளும் பாஜக தீவிரமாக உள்ளது. கங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அம்மாநிலத்தில், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.