குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு…

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 18ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தும்படி டிஜிபி சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பள்ளி குழந்தை களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவேண்டும். அங்கு அவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் சட்டம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, காவல் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றை காவல்துறை சார்பில் நடத்த வேண்டும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளுக்கு காவல் நிலையங்கள் தொடர்பான புரிதல் ஏற்படும். காவலர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்லுறவு மேம்படும். அதன், மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் அவை தொடர்பான தகவல் தாமதமின்றி பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.