தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு சென்ற இவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மகன்கள் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் அவரது மகன்கள் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் கோவில் திருவிழாக்களிலும் தேடி வந்தனர். இருப்பினும், அவர் எங்கே உள்ளார்? என்ற எந்த விபரமும் தெரியாமல் சோகத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச்சென்ற மாரியம்மாள் அங்கிருந்து தனது ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமான அவர், அங்கிருந்த ஏராளமான ஆதரவற்ற முதியவர்களை பார்த்ததும் தன் ஊருக்கு செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டார்.
இதையடுத்து, தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்தில் தன் பிள்ளைகளை காண வேண்டும் என்று மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அவர்கள் மாரியம்மாள் குறித்த விபரங்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலையத்திடம் தெரிவித்தனர்.
இதையறிந்த போலீசார் மாரியம்மாளின் மகன்களுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை கேட்டு உற்சாகமடைந்த அவர்கள் கேரள மாநிலம் தொடுபுழா ஊராட்சிக்கு சென்று தனது தாயைக் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் இத்தனை வருடம் தனக்கு அடைக்கலம் தந்த ஆதரவற்றோர் நிர்வாகிகளிடம் நன்றி தெரிவித்து விடைபெற்று சென்றார்.
இது குறித்து மாரியம்மாள் தெரிவித்ததாவது, “இத்தனை வருடம் எனது பிள்ளைகள் குறித்து நினைவு இல்லாமல் இருந்தேன். எனது இறுதி காலத்தில் எனது பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதற்கு உதவி செய்த காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.