டெல்லியைச் சேர்ந்த ரஷித் (30) என்பவர் தாய் மற்றும் 3 சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தார். இவரின் வருமானத்தில்தான் குடும்பமே இயங்கி வந்தது. அந்த வகையில் சில நாள்களுக்கு முன் ரஷீத், தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் ரஷீத் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் கூறுகையில்,”தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையால் எனது மகன் வலியில் துடித்து உயிரிழந்தான்.
அவனின் உடல் முழுவதும் சிறு சிறு தடுப்புகள் வந்தன. குடும்பத்தினர் அதனை கவனித்தோம். பின்னர், அறுவை சிகிச்சையின் பின்விளைவால்தான் அது ஏற்பட்டுள்ளது என தெரிந்தவுடன், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றார்.
உயிரிழந்த ரஷீத்தின் தாயார் ஆய்ஷா பேகம் கொடுத்த புகாரை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு பேர் உள்பட மொத்தம் நால்வரை போலீசார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததை தொடர்ந்து, ரஷீத் உயிரிழந்த நிலையில், அவருக்கு உடற்கூராய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்படும் தவறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதாலும், அவரை போன்று மற்ற தாயாமார்களும் தங்களின் மகன்களை இழக்கக்கூடாது என்பதாலும் போலீஸிடம் புகார் அளித்ததாக உயிரிழந்தவரின் தாயார் ஆயிஷா பேகம் தெரிவித்துள்ளார்.