50 ஆயிரம் முஸ்லீம்களின் வீடுகள் இடிக்கப்படுமா.?- உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானியில் உள்ள 29 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆகிரமித்து மக்கள் வசித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பகுதியில் 4000க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வீடுகள் தவிர, இப்பகுதியில் நான்கு அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 10 மசூதிகள் மற்றும் நான்கு கோயில்கள், கடைகள் ஆகியன உள்ளன.

இந்தநிலையில் இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை காலிசெய்ய கடந்த டிசம்பர் 20ம் தேதி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், ஜனவரி 9 ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் உடமைகளை எடுத்துச் செல்லுமாறு செய்தித்தாள்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதையடுத்து பல காலமாக வசித்து வரும் நாங்கள், காலி செய்ய மாட்டோம் என 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தொடர்ந்து போராட்டம், பிரார்த்தனை செய்து வருகின்றனர். வெளியேற்றத்தை தடுக்க குடியிருப்பாளர்கள் மெழுகுவர்த்தி அணிவகுப்பு, உள்ளிருப்பு போராட்டம் மற்றும் பிரார்த்தனைகளை தொடர்ந்து நடத்தினர்.

அதேபோல் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி உள்ளூர் மசூதியில் ஒரு கூட்டத்தொழுகை செய்யப்பட்டது. மஸ்ஜித் உமர் இமாம், மௌலானா முகிம் காஸ்மி, மக்கள் கூட்டாக ஒரு தீர்வுக்காக பிரார்த்தனை செய்தனர் என்று தெரிவித்தனர். அதேபோல் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி, இந்து ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத், மாநில தலைநகர் டேராடூனில் உள்ள தனது வீட்டில் ஒரு மணி நேரம் மௌன விரதம் நடத்தினார். “உத்தரகாண்ட் ஒரு ஆன்மீக மாநிலம். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 50,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து சாலைகளில் வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், அது மிகவும் சோகமான காட்சியாக இருக்கும். எனது ஒரு மணி நேர மௌன விரதம் புஷ்கர் சிங் தாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

ஆனால் உத்தரகாண்ட் முதல்வர் தாமி இதற்கு பதிலளிக்கவில்லை, ஆனால் காவல்துறையும் குடிமை நிர்வாகமும் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றன. “வெளியேற்றும் நடவடிக்கைகளை எளிதாக செயல்படுத்துவதற்காக நாங்கள் பகுதியை மண்டலங்களாகப் பிரித்துள்ளோம்” என்று பிராந்திய காவல்துறைத் தலைவர் நிலேஷ் ஏ பர்னே கூறினார்.

இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தமனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர் மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை – ஆந்திரா அரசு அதிரடி உத்தரவு!

அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘ பல தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசிப்பவர்களை ஒரே நாளில் வெளியேற்றுவது என்பது மனிதத்தன்மை ஆகாது. இது மனிதர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். பயனுள்ள தீர்வு காணப்பட வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட பகுதியில் இனிமேல் எந்தவித கட்டிடங்களும் கட்டக்கூடாது’’ என கூறி இந்த வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.