மதுரை உலக தமிழ்ச்சங்க நுழைவாயிலில் இருந்த எம்ஜிஆர் படம் அகற்றப்பட்டுள்ளது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், படத்தை மீண்டும் வைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இலக்கியத் திருவிழாவிலே முதலமைச்சர், திமுகவின் ஆட்சிக்காலம் என்பது எப்போதுமே தமிழ் ஆட்சி காலம் என்று பேசியிருக்கிறார். மீனாட்சி சொக்கநாதர் கொண்ட மதுரையிலே 5 ஆவது உலகத்தமிழ் மாநாட்டை 1986ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடத்தி காட்டினார். தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றை பறைசாற்று வகையிலே அமைந்தது என்று உலக தமிழர்களால் பாராட்டப்பட்டது.
மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில், புரட்சித்தலைவர் 1986 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகைப்படம், அடிக்கல் நாட்டு தொடக்க விழா காட்சியை உலக தமிழ் சங்கத்தின் முகப்பு வாயிலிலே வைத்து மரியாதை செய்து அது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருவது. ஆனால் இன்றைக்கு அது அகற்றப்பட்டுள்ளது. புரட்சித்தலைவரை வாக்குக்காக என் பெரியப்பா என்று அழைத்த முதலமைச்சர், இன்றைக்கு இதை அறிவாரா.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வாய்க்கு வாய் நான் அவரோடு பழகியவன், வளர்ந்தவன், என்னை ஆளாக்கியவர் என்றெல்லாம் ஒரு பொய்யுரையை ஸ்டாலின் அவிழ்த்து விட்டிருப்பது இப்போது உண்மையாகி இருக்கிறது. எம்ஜிஆர் படத்தை நீங்கள் அங்கு இருந்து அகற்றிவிட்டு, உலக தமிழ் சங்கம் என்று நீங்கள் வைத்து இருக்கிற அந்த படம் அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டுகிறது என்றும் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் மொழியை பறைசாற்ற வேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா 2 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். புரட்சித்தலைவர் 5ஆவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையிலே நடத்தி தமிழன்னை சிலை திறந்து வைத்து வரலாற்று சிறப்பை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா 8 ஆவது உலக தமிழ் மாநாட்டை தஞ்சை தரணியில் நடத்திக் காட்டினார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் நிதி கேட்டபோது, அப்போது கருணாநிதி 10 லட்சம் ரூபாயாக தவணை முறையில் தருவேன் என்று கூறினார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா ஒரே தவணையில் அந்த நிதியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க எடப்பாடியார் நிதியை அள்ளிக் கொடுத்தார். புரட்சித்தலைவர் படத்தை நீங்கள் அகற்றலாம். ஆனால் மக்கள் மனதில் இருந்து நீங்கள் புரட்சி தலைவரை அகற்றிவிட முடியாது. ஆகவே, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது எல்லை தாண்டிய நிலையிலேயே இருப்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் இன்றைக்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் திருவருவப்படம் உடனடியாக வைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையைப் பெற்று மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆர்,பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.