ஷ்ரத்தா வாக்கர் படுகொலை.. உடற்கூராய்வில் வெளிவந்த அதிர்ச்சியான புது தகவல்!

டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்ட காதலி ஷ்ரத்தாவின் எலும்புகள் ரம்பத்தைக் கொண்டு வெட்டப்பட்டுள்ளது என கூறாய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இளம் காதல் ஜோடிகளாக (லிவிங் டுகெதர் வாழ்க்கை) வலம் வந்தவர்கள் ஷ்ரத்தா வாக்கர் மற்றும் அப்தாப் அமீன் பூனாவல்லா. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) மே மாதம் 18ஆம் தேதி வாக்கரை கொலை செய்து, உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த அப்தாப், அதன்பிறகு, 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல பகுதிகளில் வீசி எறிந்துள்ளார். இறுதியில், பூனாவாலாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். ஆனால், நவம்பர் 14ஆம் தேதிதான், இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
image
டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் லிவிங் டு கெதரில் இருந்த இவர்களிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனால்தான் வாக்கரை கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார், அமீன். அதுமட்டுமின்றி, ஷ்ரத்தா வாக்கரை கொன்ற பிறகும் பல பெண்களை டேட்டிங் ஆப்பில் பூனாவாலா தொடர்ந்து சந்தித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஷ்ரத்தா வாக்கரின் உடல் பாகங்களை பல இடங்களிலும் டெல்லி போலீசார் தேடி வந்தனர். பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 23 மனித எலும்புத் துண்டுகளை கூறாய்வு சோதனைக்கு அனுப்பியதில், ஷ்ரத்தாவின் எலும்புகள் ரம்பத்தைக் கொண்டு வெட்டப்பட்டதை உறுதி செய்துள்ளன. இந்த எலும்புத் துண்டுகளின் கூறாய்வுகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்டுள்ளது.
image
கூறாய்வில் கிடைத்த முடிவுகள் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புவதால், விரைவில் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. முன்னதாக, ஷ்ரத்தா வாக்கரின் உடல்களை ரம்பத்தைக் கொண்டு வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசியதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் வாக்குமூலம் அளித்திருந்ததும், அவர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.