நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – எலான் மஸ்க்கைக் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். அதன் பிறகு ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஆடுகளம்’ போன்ற பல படங்களில், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். ‘வனயுத்தம்’, ‘கடிகார மனிதர்கள்’, ‘ஹரிதாஸ்’ போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தில்  வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

இதனிடையே சமூக பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசி வரும் நடிகர் கிஷோர் தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசை விமர்சித்தும் பல பதிவுகளைப் பதிவிட்டிருக்கிறார். நடிகை சாய்பல்லவி காஷ்மீர் பண்டிட்கள் குறித்துப் பேசியபோது அதற்கு ஆதரவு தெரிவித்து விமர்சனத்துக்கு உள்ளானார். சமீபத்தில் தொழிலதிபர் அதானி பிரபல மீடியாவை வாங்கியதைக் குறிப்பிட்டு ‘கறுப்பு தினம்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

கிஷோர்

இந்நிலையில் ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் அவரது கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் நடிகர் கிஷோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கை டேக் செய்து, ‘ஏன் அவரது கணக்கை முடக்கியுள்ளீர்கள்?’ என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.     

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.