தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் மிதமான மழை: அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் கடும் பாதிப்பு

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் மிதமான மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்குடி, வில்லாபுரம், அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வருகிறது. சோதனை சாவடி, மாதிரிப்பட்டி, சின்ன பழனிப்பட்டி, காமராஜர் நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், அம்மன்கோயில் தெரு, அருண் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வருகிறது. காலையில் தொடங்கிய மழையால் அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், வணகிரி உள்ளிட்ட 20 மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான விசை படகுகள், பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகளுத்தூர், சாயல்குடி பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு காரணமாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கமுதியில் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவர்கள் சென்றனர். மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்காததால் சாரல் மழையில் நனைந்து கொண்டு மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்கின்றனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.