அரசியலைப்பு சட்டமா இந்துத்துவாவா.?- உபி முதல்வருக்கு ஓவைசி கேள்வி.!

இந்து மத கோட்பாடான சனாதன தர்மத்தை தமிழநாட்டின் முக்கிய அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. மனு தர்மம், சனாதன தர்மம் உள்ளிட்ட கருத்துக்களை விசிகவின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதேபோல் பீகாரிலும் இந்த எதிர்ப்பு வாதம் மேலோங்கி வருகிறது.

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11ம் தேதி நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ராமசரித்மானஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது.

ராம்சரித்மனாஸுக்கு ஏன் எதிர்ப்பு வந்தது? கல்வியைப் பெற்ற பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ சமூகத்தை பிளவுபடுத்துகிறது. மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் மரியாதைக்குரிய இந்து மத நூல்களான மனுஸ்மிருதி, ராமசரிதமானஸ் போன்றவை தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் கல்வி கற்கும் எதிரானவை’’ என அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநில வருவாய்த்துறை அமைச்சர் அலோக் மேத்தா பேசுகையில், “கோவில்களில் மணி அடிக்கும் மக்கள், தற்போது சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கின்றனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேலும், பிராமண சமூகத்தை குறிவைத்து, ‘‘நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர், பிரிட்டிஷ் அரசின் முகவர்களாக இருந்தவர்கள். அவர்கள் தற்போது பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய மீதமுள்ள 90 சதவீதத்தினர் மீது தங்கள் சுரண்டலை நடத்துகிறார்கள்.

இவ்வாறு இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகள், இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை இழிவாக கூறுவதாக எதிர்ப்புகள் கிளம்பி வரும்நிலையில், சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பின்மாலில் அமைந்துள்ள நீலகண்ட மகாதேவ் கோயிலில் சிலை மறுசீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அவர் தலைமை வகித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘ சனாதன் தர்மம் இந்தியாவின் தேசிய தர்மம். சுயநலத்திற்கு மேலாக நாம் உயரும் போது, தேசிய தர்மத்துடன்’ இணைகிறோம். தேசிய மதத்துடன் இணைந்தால் நமது நாடு பாதுகாப்பாக இருக்கும்.

எந்தக் காலத்திலாவது நமது வழிபாட்டுத் தலங்கள் இழிவுபடுத்தப்பட்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தியைப் போல அவற்றை மீட்டெடுப்பதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். தேசிய உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் பக்தர்கள் அனைவரும் பங்களித்துள்ளீர்கள்’’ என்று அவர் கூறினார்.

பாஜக தலைவரின் கருத்துக்கு காங்கிரஸ் உடனடியாக பதிலடி கொடுத்தது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸின் (கேகேசி) தலைவர் உதித் ராஜ் கூறும்போது, “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்று முதல்வர் யோகி கூறினார். இதன் பொருள் சீக்கியம், ஜைனம், பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற பிற மதங்கள் முடிந்துவிட்டன என்பது அர்த்தம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்வினை ஆற்றியுள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை, நாட்டில் எந்த ஒரு மதமும் இருக்க முடியாது.

யோகி ஆதித்யநாத் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். பிறகு நீங்கள் எப்படி இந்துத்துவாவை ஊக்குவிக்க முடியும்? அகிலேஷ் யாதவ் வரலாற்றில் பெற்ற அளவு முஸ்லிம் வாக்குகளை இம்முறை பெறவில்லை. ஆனாலும் பாஜக ஆட்சி அமைத்தது. அகிலேஷ் யாதவ் எங்கே? அவர் ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? அவரது சொந்த எம்எல்ஏவின் பெட்ரோல் பம்பு உடைக்கப்பட்டது’’ என்று அவர் கூறியுள்ளார்.

மதுபான கொள்கை விவகாரம்;டெல்லி முதல்வருக்கு ஆட்டம் காண்பித்த பாஜக.!

இந்த அசாதுதின் ஓவைசி, எதிர்கட்சிகளின் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்க இந்துத்துவா சக்திகளால் உருவாக்கப்பட்ட முஸ்லீம் தலைவர் என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோலிவியடைந்ததற்கு இவரும் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் ஓட்டுக்களை பிரித்ததே காரணம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.